states

img

‘ரேவடி’ சலுகைகள் அனுபவிப்பது யார்?

சாதாரண மக்களுக்கு தரப்படும் இலவசங்களை “ரேவடி” கலாச்சாரம் என இகழ்ந்து பேசினார் மோடி. ஆனால் அவரது ஆட்சியில் ரேவடி சலுகைகள்  அனுபவிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்!

ரேவடி 1: கார்ப்பரேட் வரி சலுகை

  •     கார்ப்பரேட் வரிகள் 30%லிருந்து 22% ஆக குறைக்கப்பட்டன. புதிதாக தொடங்கப்படும் கார்ப்பரேட்டுகளுக்கு 15% ஆக குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு வருவாய் இழப்பு- ரூ.1.85 லட்சம் கோடி.
  •     கார்ப்பரேட் வரி வருவாய் கடந்த சில ஆண்டுகளில் ரூ. 6.63 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.57  லட்சம் கோடியாகவும் பின்னர் ரூ .4.57 லட்சம் கோடியாகவும் சரிந்தது. ஆனால் இதே கால கட்டத்தில் கார்ப்பரேட்டுகளின் லாபம்பன்மடங்கு உயர்ந்தது.
  •  வரிச்சுமை கார்ப்பரேட்டுகளிடமிருந்து சாதாரண மக்களுக்கு மடைமாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் உழைக்கும் மக்கள் கட்டும் வருமான வரி மூலம் வருவாய் 117%  உயர்ந்த அதே சமயத்தில் கார்ப்பரேட் வரி வருவாய் 28% மட்டுமே உயர்ந்தது. 
  •  பட்ஜெட் கணக்கீடு படி கார்ப்பரேட் வரி மொத்த வரி வருவாயில் 34.5% லிருந்து 27.2%ஆக சரிந்தது. ஆனால் சாதாரண மக்கள் கட்டும் வருமான வரி வருவாய் 20.8% லிருந்து 30.2%ஆக உயர்ந்தது.
  •  உண்மையில் கார்ப்பரேட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட 22% ஐவிட குறைவாகவே வரி தருகின்றனர். ரிலையன்ஸ் கட்டும் வரி விகிதம் 16.5%தான்! அல்ட்ரா டெக்  சிமெண்ட் கட்டும் வரிவிகிதம் 14.8% தான்!

ரேவடி 2: வங்கிக் கடன் தள்ளுபடி

  •  மோடி ஆட்சியில் 10 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வங்கிக் கடன் ரூ.14.56 லட்சம் கோடி.
  •  ஏமாற்றப்பட்ட வங்கி பணத்தில் அரசு திரும்ப பெற்றது 14% மட்டுமே!
  •  திட்டமிட்டு வங்கி கடனை ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கை 2014ல் 9249. 2024ல் இது 1,96,930 ஆக உயர்வு.
  •  கடன் ஏமாற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடியில் பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு கை மாற்றம். இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு - அதாவது கார்ப்பரேட்டுகளுக்கு பலன் ரூ .2.62 லட்சம் கோடி.
  •  2023 மார்ச் வரை ஏமாற்றிய கடனுக்காக வங்கிகள், 26,086 வழக்குகளைத் தொடர்ந்துள்ளன. ஏமாற்றப்பட்ட கடன் ரூ. 6.03 லட்சம் கோடி.
  •  2023ஆம் நிதியாண்டில் மட்டும் தள்ளுபடி வங்கி கடன் ரூ.1,72,800 கோடி. இதே ஆண்டில் கல்விக்கு ஒதுக்கீடு ரூ.1,12,898 கோடி. சுகாதாரத்துக்கு ரூ.89,155 கோடி. நூறுநாள் வேலைதிட்டத்திற்கு  80,000 கோடி.
  •      யார் ‘ரேவடி’யை அனுபவிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம். 

ரேவடி 3: கார்ப்பரேட்டுகளுக்கு மானியம்

  • திய தொழில்களுக்கு ஊக்கம் எனும் பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தரப்படும் மானியம்.
  •      வேதந்தா - ஃபாக்ஸ்கான் கூட்டு குழுமத்துக்கு குஜராத்தில் செமி கண்டக்டர் உற்பத்திக்காக ரூ. 76,000 கோடி மானியம்.
  •  ஹூண்டாய் மின் வாகனங்கள் தயாரிப்பு ரூ. 18,000 கோடி மானியம். இந்த மானியம் பெற்ற நிறுவனத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என ஹூண்டாய் பகிரங்க அறிக்கை விடுத்த பின்னர் இது நிறுத்தம்! போலி நிறுவனத்துக்கு எப்படி ரூ. 18,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது?

ரேவடி 4: பொதுச் சொத்துக்கள் தனியாருக்கு!

மோடியின் ஆட்சியில் 2014-2022 இடையே பொதுச்சொத்துக்கள் ரூ.4.86 லட்சம் கோடி அளவுக்கு தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. இதற்கு மோடி அரசு சூட்டிய புதிய நாமகரணம் “தேசிய பணமயமாக்கல் திட்டம்.”

ரேவடி 5: தொழிலாளர் சட்டங்கள் மாற்றம்

பல தொழிலாளர் நலச் சட்டங்கள் மாற்றம் மூலம் கார்ப்பரேட்டுகள் மேலும் லாபக்கொள்ளை அடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்படி பல வழிகளில் கார்ப்பரேட்டுகளுக்கு “ரேவடி” இலவசங்களும் சலுகை களும் தந்துவிட்டு மோடி அரசாங்கம் சாதாரண மக்களுக்கு தரும் நன்மைகளை ரேவடி என இகழ்கிறது.

கார்ப்பரேட்டுகளின் ரேவடிகளைத் தடுக்க பாஜக அரசை அகற்றுவோம்.

- அ.அன்வர் உசேன்